Tuesday, October 23, 2007

(181) இந்தியன் ரயில்வே - பெஸ்ட் ஆஃப் இந்தியா

இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்தியாவை வடக்கில் ஹிமாச்சலில் ஆரம்பித்து - பஞ்சாப் பதன்கோட்டில் இருந்து தெற்காக சென்னைக்கு 2800 கிமீ தூரத்தை ஹரித்வார்-டில்லி வழியாக ரயிலில் 48 மணிநேரம் பயணித்தது தனி அனுபவம்.

ஐரோப்பாவின் மேற்கத்திய லண்டன் நகரிலிருந்து ஐரோப்பாவின் கிழக்கு முனை நகரமான இஸ்தான் புல்லிற்கு இடையே இருக்கும் தூரம் கிட்டத்தட 2700 கிமீ.

லண்டன்(இங்கிலாந்து) - பாரீஸ்(ப்ரான்ஸ்) 350 கிமீ
பாரீஸ் - ம்யூனிச்(ஜெர்மனி) 685 கிமீ
ம்யூனிச்- வியன்னா(ஆஸ்திரியா) 350கிமீ
வியன்னா -ப்யூடாபெஸ்ட்(ஹங்கேரி) 220கிமீ
ப்யூடாபெஸ்ட் - புசாரெஸ்ட்(ரொமானியா)650 கிமி
புசாரெஸ்ட்- இஸ்தான்புல்(துருக்கி) - 445 கிமீ


இஸ்தான்புல்லில் இருந்து லண்டனுக்கு ரயிலில் கிளம்பினால் மூன்று இரவுகள் ரயிலில் பயணிக்க வேண்டும். குளிர்சாதன வசதியுள்ள இரண்டாம் வகுப்பில் ஒரு நபருக்கு 400 யூரோ கட்டணம் 400 x 55 = Rs. 22,000/-

இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முதாவியிலிருந்து தமிழகத்தின் நாகர்கோவிலுக்கு இடையே இருக்கும் தூரம் 3739 கிமீ 4 நாட்கள் 96 மணி நேரம் பயணிக்க வேண்டும்
கட்டணம் குளிர்சாதன இரண்டாம் வகுப்பில் ரூ 2900/-, மூன்றடுக்கு குளிர்சாதன இரண்டாம் வகுப்பில் ரூ 1950/- தூங்கும் வசதி இரண்டாம் வகுப்பில் ரூ 690/-

இந்திய ரயில்வே சந்தேகமே இல்லாமல் க்ரேட் ஓவர் ஆல் பெர்பார்மர். (லாலுவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை)

எந்த நேரத்திலும் ஆறு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மேலும் கீழுமாய் டில்லி-சென்னைக்கு இடையே ஓடுகிறது!

டில்லி, சென்னை ரயில்வே ஸ்டேஷன் கேண்டீன்களில் வசூலிக்கும் காசுக்கு ஏற்ற அளவில் உணவுப் பண்டங்களின் தரம் இருக்கிறது.

டில்லி ரயில்வே கேண்டீனில் மண்சொப்புவில் (பாறை)இட்லிக்கு சாம்பார் வாங்கிச் சாப்பிட்டது டிபிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்! (மண் சொப்புவுக்கும் லாலுவுக்கும் நிறையவே சம்பந்தம் உண்டு)

தமிழகத்தில் கன்னியாகுமரி, குஜராத் கட்சில் இருக்கும் Okha, இவை இந்தியா தேசத்தின் விளிம்பில் இருக்கும் ரயில் நிலையங்கள்!

ஊட்டி, சிம்லா ரெண்டு இடங்களில் மட்டும் குறுகிய ரயில்பாதை மலை ரயில் இருப்பதாக நம்மில் பலர் நினைப்பதைத் தாண்டி பஞ்சாப் பதான் கோட்டில் இருந்து ஹிமாச்சல் பிரதேஷ் ஜோஹீந்தர் நகருக்கு நேரோ கேஜ் பொம்மை மலை ரயில் ஓடுகிறது.

இந்திய ரயில்வேயின் முழு நெட்வொர்க்கையும் இந்த மேப்பில் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த ஐரோப்பாவின் ரயில் நெட்வொர்க்கை விட மிக விஸ்தாரணமான நெட்வொர்க் இந்தியன் ரயில்வே நெட்வொர்க்.

வால்யூ பார் மணி இந்தியன் ரயில்வேயில் உத்திரவாதம்.

சதாப்தி ரயில்கள் வேகம் + வசதிகளில் மேம்பட்டிருக்கிறது.

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து ஜம்முதாவிக்கு 3739 கிமீ தூரம் ஓடும் நெடுந்தூர வாராந்திர ரயில். திருவனந்தபுரம் - கௌஹாத்தி 3300 கிமீதூரம் ஓடி தெற்கிலிருந்து கிழக்கை இணைக்கிறது.

இந்தியன் ரயில்வேயில் பல்வேறு தரங்களில் பயண வசதி ரயிலில் கிடைக்கிறது.
வரிசைப்படி மிகுந்த முதல் தரமான ரயில் சேவை கிடைப்பது:
முதலிடம்- ராஜதானி துரித ரயில்கள்
இரண்டாம் இடம்- சதாப்தி, ஜன-சதாப்தி துரித ரயில்கள்
மூன்றாம் இடம் -சம்பர்க்ராந்தி துரித ரயில்கள்-
நான்காவது இடம் கரீப் ரத்-ஏழைகளின் ரதம் துரித ரயில்கள்
ஐந்தாம் இடம் - இதர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் ரயில்கள்


இந்தியன் ரயில்வேயில் முன்னுரிமை தந்து அவசரமாக சில மாற்றங்கள் எடுத்துவரவேண்டும்:

1. தற்போது ரயில்களில் நடைமுறையில் இருக்கும் ஓப்பன் டிஸ்சார்ஜ் டாய்லெட் மாற்றப்பட்டே ஆகவேண்டும்.

இந்த ஓப்பன் டிஸ்சார்ஜ் டாய்லட் மாறினாலே ரயில் நிலையங்களில் துர்நாற்றம், ஈக்கள், கொசுத்தொல்லை,பெருச்சாளிகள் தொல்லைகள் 80% குறைந்துவிடும்.

தற்போதைய தினசரி துப்புறவு,சானிடேசன் செலவுகளில் பெரும்பாலானதை அடுத்தகட்ட பயணிகளின் வசதிகளை மேம்படுத்தலாம்.

குறிப்பாக 100% ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கலாம்.

அதிகமான பயணிகள் வந்துபோகும் பிசியான ஸ்டேஷன்களில் கூடுதலாக நாற்றம் குறைந்த பல கழிப்பிடங்கள் ஏற்படுத்திப் பராமரிக்கலாம்.

2. பான்பராக் தயாரிப்பாளர்கள் ரயில்வே ஸ்டேஷன் சுத்தப்படுத்தும் செலவுகளில் 50% ஏற்கவேண்டும் மீதியை சிகரட் தயாரிப்பாளர்கள்+குளிர்பான தயாரிப்பாளர்கள் ஸ்பான்ஸர் செய்யவேண்டும்.

3. பயணிகளில் பான்பராக் போட்டு சகட்டுமேனிக்குத் துப்புபவர்களை அப்போதுதான் பயணிகள் ரயில் வந்து போன ஸ்டேஷன் ப்ளாட்பாரத்தின் தண்டவாளத்தை ஒருமணிநேரம் கட்டாயம் சுத்தப்படுத்தும் பொறுப்பைத் தரவேண்டும்.

இந்திய ரயில்களில் ரயில் நிலையங்களுக்குள்ளே பயணிப்பதை / இருப்பத்தைத் தவிர்த்து, இந்தியன் ரயில்வேயின் ரயில்களில் பயணிப்பது இணையற்றது.

இந்திய ரயில்வேயின் ரிசர்வேசனுக்கு இணையில்லை! திறமையாக, விரைந்து செயல்படும் மக்கள் உணரும் சேவைகளில் இந்திய ரயில்வேயின் இணைய முன்பதிவு / எங்கிருந்தும் எந்த ரயிலுக்கும் முன்பதிவு என்பது உலகத் தரமான விஷயம்.

மொத்த ஐரோப்பா ரயில் நெட்வொர்க்கைக் காட்டிலும் பரந்த கட்டமைப்பு, ஸ்டேஷன்கள், ரயில்கள் அதிகம் இருப்பது இந்தியரயில்வேயில். ஆன்லைனில் ரிசர்வேசன் செய்துகொள்ளலாம். உள்ளூர் முகவரி தந்தால் மூன்று நாட்களில் கொரியரில் அனுப்பிவிடுகிறர்கள். இல்லை இந்தியாவில் பயணத்தைத் துவங்கும் நாளில் டில்லி, மும்பாய், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், ஆமதாபாத், கொச்சி போன்ற பெரிய ஸ்டேஷன்களில் ஸ்டேஷன் மாஸ்டரிடம் இந்தியா வந்ததும் கலெக்ட் செய்து கொள்ளலாம்!


தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் Pantry Car கல்யாண வீடு மாதிரி பரபரப்பா டீ, காபி,குளிர்பானம், இட்லி, வடை, பொங்கல், சாம்பார், மசால்தோசை, ப்ரட் சாண்ட்விச், மதிய மீல்ஸ், மாலையில் பக்கோடா, மெதுவடை, சிப்ஸ், இரவு சூப் , மீல்ஸ் என்று ரவுண்டு கட்டி விற்பனை செய்கிறார்கள். விலை கொஞ்சம் கூடுதல் என்றாலும் நகரும் ரயிலில் கிடைக்கும் வசதிக்கும் , வெரைட்டிக்கும் சமாதானம் செய்துகொள்ளலாம்.


இந்திய ரயில்வேயின் டெலஸ்கோபிக் கட்டணமுறை இன்னொரு ஆச்சரியம். சென்னை to மதுரை 500கிமீ தூரத்திற்கு ரூ. 230 கட்டணம் சென்னை to ஜம்மு 2800 கிமீ தூரத்திற்கு ரூ 570 கட்டணம். ஒரே தேசமாக இந்திய யூனியனாக இருப்பதால் இந்தக் கட்டணமுறை சாத்தியம்.

இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் பயணிப்பதிலே பெரிய மகிழ்ச்சி. பல்வேறு விதமான மக்களோடு 36 மணிநேரம் பயணிக்கும் கலகலப்பு நிறைந்த பெரிய வாய்ப்பு.
வீட்டில் பெரும்பாலானோர் தேர்வான ஏசி பெட்டியைத் தவிர்த்து வெகுஜன கலகலப்பான சூழலை அனுபவிக்க வேண்டி சாதாரண தூங்கும் வசதிப் பெட்டியை வற்புறுத்தியிருந்தேன். நான் சற்று பயந்தது ஜூன் மாத மத்தியபிரதேச, நாக்பூர், ஆந்திரா வெய்யில் உக்கிரத்தை எண்ணியே. தெய்வம் அருள் புரிந்தது. ஜான்ஸியில் பெய்ய ஆரம்பித்த மழை சென்னை வரும்வரை சூரியன் குளிர் மேகத்துகுள்ளேயே இருந்துகொண்டார். இயற்கை அன்னையே மொத்த ரயிலுக்கும் குளிர்சாதனம் செய்து தந்தது.

90களில் இருந்த ரயில் பெட்டிகளை விட புதிய இரண்டாம்வகுப்பு பெட்டிகளில் மினரல்வாட்டல் ஹோல்டர், யுடிலிடி நெட், முகம் பார்க்கும் கண்ணாடி என்று கூடுதல் கொஞ்சம் வசதி செய்து தந்திருக்கிறார்கள். மிக முக்கியமாக அனைத்து பெட்டிகளையும் கரப்பு-பூச்சித்தொல்லையிலிருந்து பெஸ்ட் கண்ட்ரோல் சிலமாதங்களுக்கு ஒரு முறை செய்வது தரும் பலனைக் கொஞ்சம் உணரமுடிகிறது.

இடார்சி தாண்டி விந்திய மலைக்குடைவுகள் வாயிலாக பயணிக்கிறபோது சட்டென்று இருட்டி வெளிச்சம் மீண்டு வருவது மும்பை தடத்தில் லோனாவாலா-புனே ரயில்வே டன்னல்களை நினைவூட்டுகிறது. அப்பர் பர்த்தில் பகலில் ஏறிப் படுத்துக்கொண்டு சடசடசட என்று பாலங்களில் இசை எழுப்பிய படி ரயில் செல்வதை ரசித்தபடி பயணிப்பது அந்த ரயில் அனுபவத்தை நினைவுகளில் பதியவைக்கிறது.

இந்திய ரயில்வேயின் எலக்டிரிக் டிராக்ஷன் (மின்மயமான தடங்கள்) பிரமிப்பு இன்னும் இருக்கிறது. விமானம் தவிர்த்த இந்திய பொது மக்கள் போக்குவரத்தில் சகாயமான விலையில் 125 கிமீ வேகத்தில் தொடர்ந்து செல்ல முடிவது சூப்பர் பாஸ்ட் ரயில்களால் தான்.
புதுடில்லியிலிருந்து சென்னைக்கான 2200 கிமீ தூரத்தை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 9 ஊர்களில் மட்டும் நின்று செல்கிறது.

இந்திய ரயில்வேயின் மிக முக்கியமான ஒரே பெரிய குறை ஓப்பன் டிஸ்சார்ஜ் டாய்லட். மக்களுடன் நேரடியான தொடர்பு இருக்கும் இந்திய அரசுத்துறைகளில் சிறப்பான நிர்வாகத்திறன் இருப்பது முதலிடம் தபால் துறைக்கு இரண்டாவது இடம் ரயில்வே என்பது எனது எண்ணம்.


அன்புடன்,


ஹரிஹரன்

Monday, October 22, 2007

(180) பெஸ்ட் ஆஃப் இந்தியா & பெஸ்ட் ஆஃப் ஐரோப்பா

இமயமலையின் க்ளாசியர் பனிக்கட்டி உருகி கங்கையாக ப்ரவாகமெடுத்து மலையினின்று இறங்கி வெகு வேகத்துடன் பூமியைத் தொடும் இடம் ரிஷிகேஷ்.

ரிஷிகேஷில் இங்கே கங்கை நீர் கலங்கலாக மணல்துகள்களுடனும், கொளுத்தும் 45டிகிரி சம்மர் வெய்யிலிலும் ஆற்றுநீரில் ஐந்து நிமிடம் அமிழ்ந்திருந்தால் உடல் மரத்துப்போகும் குளிர்ச்சியோடு இருக்கிறது. ரிஷிகேஷில் குளித்தால் கண்,மூக்கு, காது எல்லாம் நுண்மையான மண்துகள் மயமாகிவிடும்!

ரிஷிகேஷிலிருந்து இருபத்தி ஐந்து கிலோமீட்டர் பூமியில் ஓடி வந்து ஹரித்வாரில் கங்கை நீரில் மணல் துகள் நிறையவே மட்டுப்பட்டு விடுகிறது. கங்கையின் ஆர்ப்பரிக்கும் வேகம் படித்துறையிலேயே தெரியும். பாதுகாப்புக்கு இருக்கும் இரும்புச் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு குளித்தல் அவசியம். படித்துறையில் அமர்ந்து கொண்டு ஆற்றின் ஓட்டத்துக்கு குறுக்காக காலை நீட்டினால் காலை ஒடித்துவிடும் வேகத்துடன் ஓடுகிறாள் கங்கை!

டெல்லி வெய்யிலில் அலைந்த சூடு தணிக்கும் படுகுளிர்ச்சியான கங்கைக்குளியல். எண்பதுகளில் பள்ளி கல்லூரியில் படிக்கும் போது கோடை விடுமுறை நாட்களில் வைகையாற்றில் குளித்ததை அடுத்து நான் அதிகமாகக் குளித்தது கங்கையில் தான் (1991, 2007) (ரெண்டு தரத்துக்கே இவ்வளவு பில்டப்பான்னு டென்ஷனாகாதீங்க)

ஹரித்வாரில் கங்கை நீரை பாட்டிலில் பிடித்தால் வேகம் காரணமாக turbidity கலங்கல் அதிகமாக இருக்கிறது. சிலமணி நேரம் கழித்து Crystal clear ஆகிவிடுகிறது மிகச் சொற்பமான வெண்ணிற Sand Residues பாட்டிலின் அடியில்.

குறுகலான வாயுடைய பெட் பாட்டிலில் புரண்டோடும் அதிவேக கங்கையில் பாட்டிலை நீரோடு விட்டுவிடாமல் நீரை ரொப்புவது என்பது தனி அட்வஞ்சர்!

இமயத்திலிருந்து நதியாக உருவாகி வங்காள விரிகுடா கடலில் கலக்கும் வரை கங்கைநதியின் நீளம் 2510 கிமீ. கங்கை நதி உத்ராகண்ட், உத்ரபிரதேஷ், பீஹார், மேற்கு வங்காளம், வங்க தேசம் எனப் பாய்ந்தோடி வளப்படுத்தி கடலில் கலக்கிறது.


ஐரோப்பாவில் டான்பெ Daunbe நதி ஜெர்மனியில் கருங்காடுகளில் உருவாகி மத்திய ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா முழுவதும் பாய்ந்தோடி நிலத்தால் சூழப்பட்ட கருங்கடலில் கலக்கிறது.

Germany ,Austria, Slovakia, Hungary, Croatia, Serbia, Bulgaria, Romania, and Ukraine என்று 9 தேசங்கள் வழியாக 2850 கிமீ தூரம் பயணிக்கிறது டான்பெ நதி.

இயற்கையை, நதியை தெய்வமாக வழிபடும் சனாதன கலாச்சாரம் நிரம்பியிருந்த பாரதத்தில் ஓடும் கங்கையை காசியில் பாதி எரிந்த பிணங்கள் மிதக்கும் காட்சியாகக் கண்டால் பாரம்பரிய கலாச்சார-தத்துவ பிணைப்பு சிதைந்து போனால், சுயநல சூப்பர்ஸ்டிஷன் மட்டும் நிரம்பிய தினசரி வாழ்வியல் பேணும் மூடர் கூட்டமாக நம்மக்கள் வாழ்வது தெரிகிறது.

ஐரோப்பாவில் நதிகளைப் பேணுகிறார்கள். அனைத்து ஐரோப்பிய பெருநகர்களூடாக நதிகள் ஓடுகின்றன. ஐரோப்பாவில் நதிகளை சாலை, ரயில் போக்குவரத்துக்கு இணையாக முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள்.

கங்கையாவது ஆன்மீகத் தலைநகரமான வாரணாசி நகருக்குள்ளே சுயநல மூடநம்பிக்கையாளர்களால் சில பல கிலோமீட்டர்களுக்கு மாசுபடுத்தப்பட்ட நதியாக இருக்கிறது.

தமிழகத் தலைநகரில் மூட நம்பிக்கைகளை உடைத்த பகுத்தறிவாளர்களின் ஆட்சியில் சென்னை நகருக்குள்ளே ஒடுகின்ற கூவம் நதி, அடையாறு நதிகளின் பவித்ரமான தூய நிலையை நினைத்துக்கொண்டேன்!

நதியை தெய்வம் என்று தொழுதவர்களே தமிழர்கள். தெய்வமே இல்லை எனும் கொள்கையுடையோர் ஆட்சிக்கு வந்து 40 ஆண்டுகள் கோலோச்சி தலைநகர் சென்னையின் நதிகளில் இருந்த தெய்வத்தை வெற்றிகரமாக விரட்டிவிட்டார்கள்!

பகுத்தறிவான செயல்பாடுகளால் இன்றைக்கு தமிழ்நாட்டின் எந்த நதிகளிலும் நீர் ஓடினால் அது செய்தி எனும் நிலை! தெய்வம் நீங்கிய ஆட்சிகளால் தமிழகத்து நகரங்களில் ஓடும் நதிகளில் அரசியல் திரா"விட" பகுத்தறிவு மட்டும் நிரம்பி ஓடி பெரிதாய் மணக்கிறது!

எங்காவது ஒரு பெரிய நகருக்குள் நல்ல நீர் நிரம்பி ஓடும் நதிகளைக் காணும்போதெல்லாம் இந்த ஆதங்கம் பெரிதாக எனக்குள் வரும். சென்னையில் வாழும் தமிழனாயிருப்பதில் ஒரு வசதி எனக்கு! வெட்கப்படுவது என்பது மறந்துவிட்டது!

அடுத்த தலைமுறைக்கு நதிகள் மாதிரியான இயற்கைச் செல்வங்களை எப்படி விட்டுச்செல்வது என்பதை ஐரோப்பாவின் டான்பெ நதியைப் பயன்படுத்துபவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்!

தமிழன் என்ற இன உணர்வுடன், பகுத்தறிவோடு சிந்தித்து திட்டம் தீட்டி தமிழகத் தலைநகர் சென்னையில் இருந்து ஆட்சி நடத்தும் திரா"விட" கட்சியினரது வாழ்நாள் சாதனைகளான கூவம் ஆறு, அடையாறு இவற்றின் நிலையினைப் பார்த்து அடுத்த தலைமுறையினர்க்கு இயற்கைச்செல்வங்களை எப்படியான நிலையில் விட்டுச்செல்லக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்!

அன்புடன்

ஹரிஹரன்

Sunday, October 21, 2007

(179) தமிழின முப்பாட்டன் இராவணன்..அருணகிரிநாதர் எனும் ஆரிய அடிவருடி!!

தமிழின வரலாறு வலைப்பூ வழியா கத்துக்கிட்டா எங்க ரீச்சாவீங்க? பதில் பதிவின் கீழே!

இட்லிவடையின் இந்தப்பதிவில் படித்த தொல்.திருமாவளவன் தந்த புல்லரிக்கும் வரலாற்று விளக்கம் இது:


"ராமன் என்பவன் யார்? ராவணனை அழிக்க இலங்கைக்கு, குரங்குகளின் துணையோடு படையெடுத்து சென்றவன். ராவணன் யார் ? நம்முடைய முப்பாட்டன். தமிழன், தமிழ்ச்சங்கம் வளர்த்து தமிழை வளர்த்தவன். ஒரு தமிழனை அழிப்பதற்காக வட மாநிலத்தில் இருந்து படையெடுத்துச் சென்ற ராமன், அதற்காக கட்டிய பாலம் ராமர் பாலம் என்றால், நம்முடைய விரோதி கட்டிய ராமர் பாலம் என்று ஒன்று இருந்தால், அதனை வெடிகுண்டு வைத்து தகர்க்கவும் தயார்" - விடுதலைசிறுத்தை திருமாவளவன்


இன்றைய எனது இணைய மேய்ச்சலை நீட்டி இன்னொரு சக பதிவர் பதிவிலே போனால் அவர் படித்து மகிழ்ந்த அருணகிரியார் பாடலுக்கு தந்த விளக்கத்தைப் படிக்கையிலே, அருணகிரி எப்படிப்பட்ட பச்சையான ஆரிய அடிவருடி என்பதை தமிழின துரோகியான அருணகிரியின் இந்தப்பாடல் விளக்கிவிட்டது.

முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்

கொத்தப்பறை கொட்டக் கலமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!


தமிழ்ச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த, தமிழின முப்பாட்டனான இராவணனின் பத்துத் தலைகளையும் வெட்டிச்சாய்த்தவன் முருகப்பெருமான்னு எழுதியிருக்கும் அருணகிரி மட்டும் இன்னிக்கு இருந்திருந்தா சிறுத்தையா பாய்ஞ்சு அவரோட அருணாக்கொடியைப் பிடித்து தலையைச் சுத்தி வீசுவதில் தமிழின எதிரி அருணகிரி தமிழின முப்பாட்டன் இராவணனின் தேசத்தில் போய் விழவேண்டியிருக்கும்!


முத்தமிழுக்கும் முதல்வன் முருகப்பெருமான். முருகன் அக்மார்க்/ISO தரம் பெற்ற ஒரிஜினல் தமிழ்க்கடவுள். ஆகவே முருகப் பெருமான் தமிழின முப்பாட்டன் இராவணனின் பத்து தலைகளைத் தன் கூரிய வேலால் எப்படிக் கொய்திருக்க முடியும்???


அருணகிரிதான் அந்தக்காலத்திலே ஓ போட்ட ஆ.வி.ஞானி ! தமிழின் மீது பற்று இருப்பது மாதிரி தமிழின முப்பாட்டன் இராவணனது பத்துத் தலைகளை தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை வைத்தே வேலால் கொய்ய வைத்து மகிழ்ந்திருப்பதைப் பார்த்தாலே லெமூரியாக் கண்டம் மூழ்கி தமிழினம் பிரிந்த வரலாறு புரிபடும்!

இப்படிப்பட்ட தமிழின துரோகியான ஆரிய அடிவருடி அருணகிரிநாதர் திருஅண்ணாமலையின் உச்சியிலிருந்து குதித்தபோது தமிழ்க்கடவுள் முருகன் தோன்றி அவரைக் காத்தது மட்டுமின்றி அருணகிரியின் நாக்க்கில் முத்தமிழின் அப்டேட்டட் வெர்ஷனை கூர்வேலால் என்க்ரிப்ட் செய்தும் விட்டார் என்று புரட்டையும் பரப்பியவர் அருணகிரிநாதர்!


ஆதியிலிருந்தே தமிழனுக்கு நகைச்சுவை அதிகம்! இணையத்தில் இறைந்து கிடக்கிறது தமிழினமான நகைச்சுவைகள்! சிறுத்தை மாதிரி பாய்ந்து தாக்குகிறது சிறப்பான நகைச்சுவை.

குவிஸ் பதில்: தமிழின அரசியல் வாதியின் வரலாற்று விளக்கம் மூலமாக, மேற்கொண்டு இணையத்தில் தமிழ்வலைப்பூ வாயிலாக வரலாற்றைப் படித்தால் நீங்கள் ரீச்சாகும் இடம் சென்னையின் கீழ்ப்பாக்கம், வேலூரின் பாகாயம்!


அன்புடன்

ஹரிஹரன்

Wednesday, October 03, 2007

(178) ஹேப்பி பர்த் டே காந்திஜி!

பாரதத்தின் சுதந்திரப்போராட்டம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவர் காந்திஜி.

காந்திஜியின் சுதந்திரப்போராட்டங்கள் என்றதும் நினைவுக்கு வருவது உப்புச் சத்தியாகிரகப் போராட்டம்.


இங்கிலாந்தில் இருந்து பாரதம் வரும் கப்பல்களில், சீரான கடல்பயணத்திறக்காக கப்பலின் சீரான எடை நிரவலுக்காக உப்பு மூட்டைகள் கப்பல்களின் அடித்தளத்தில் நிரப்பிக்கொண்டு பாரதம் நோக்கிப் பயணிக்கும்.

இந்தக் கப்பல்கள் இங்கிலாந்துக்கு திரும்பச் செல்லும் போது பாரதத்தின் எண்ணற்ற வளங்களைக் கொள்ளையடித்து மூட்டை கட்டி எடுத்துச் செல்லும்.

இங்கிலாந்தில் இருந்து வந்த கப்பல்களின் மூலம் இப்படி நிறையச் சேர்ந்துவிட்ட உப்பை
என்ன செய்வது என்று யோசித்த ஆங்கிலேய அரசு, பாரதமக்கள் இங்கிலாந்து உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உள்நாட்டு உப்புக்கு வரிபோட்டு உத்தரவு போட்டது.
இதனால் இங்கிலாந்து உப்பு உள்நாட்டு உப்பை விட மலிவான விலைக்கு கிடைக்கும் சூழலை ஏற்படுத்தியது இங்கிலாந்து அரசு.


மூன்று பக்கம் கடல் சூழ்ந்த பரந்து பட்ட பிரிக்கப்படாத பாரத நாட்டில், பாரத மக்கள் ஏன் வெளிநாட்டு உப்பை தங்கள் தேவைக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் உள்நாடு உப்பு மீது விதிக்கப்பட்ட வரியை நீக்கவேண்டும் என்று காந்தியடிகள் எதிரிப்புத் தெரிவித்தார்.

எதிர்ப்பு தெரிவிப்பதோடு இல்லாமல் ஆங்கிலேய அரசின் உத்தரவைத மீறி, உப்புச் சத்தியாகிரஹம் எனும் சுதேசி உப்புக் காய்ச்சும் போராட்டத்தை காந்தியடிகள் அறிவித்தார்.

ஆங்கில அரசு உப்புப் பெறாத இன்னுமொரு முட்டாள் போராட்டத்தை காந்தியடிகள் முன்னெடுப்பதாக அசட்டையாக நினைத்தது.

12 மார்ச் முதல் 06 ஏப்ரல் வரை 1930 ஆண்டில் காந்திஅடிகள் உப்புக்காய்ச்சும் போராட்ட யாத்திரையை 400 கி.மீ தூரம் நடந்து மேற்கொண்டு தண்டி கடற்கரையில் நடத்தினார். தமிழகத்தில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்புக் காய்ச்சும் போராட்டம் நடந்தது.



தண்டி கடற்கரையில் உப்புக் காய்ச்சும் காந்தியடிகள்

ஆனால் பாரதம் முழுவதும் மக்கள் முழுமையாக இணைந்து போராடும் போராட்டமாக உப்புச்சத்தியாகிரகம் உருவெடுத்தது. பிரிக்கப்படாத பாரதத்தின் முப்புறமும் நிறைந்த பரந்துபட்ட கடற்கரைகள் அனைத்திலும் பாரத மக்கள் கூடிச் சேர்ந்து ஆங்கிலேயர்களின் அரசுக்கு தமது கடுமையான எதிர்ப்பினை தொடர்ந்து தெரிவிக்க ஏதுவான எளிமையான போராட்டமாக உப்புச்சத்தியாகிரகப்போராட்டம் வலுப்பெற்றது.

ஆங்கிலேய அரசு மக்கள் மீது மிகவும் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டது.
காந்தியடிகள் பாரத மக்களிடையே நடைமுறைப்படுத்திய ஒத்துழையாமை போராட்டத்தில் வெகுஜன மக்கள் திரளாகப் பங்கேற்ற நிகழ்வுகளில் முக்கியமானது உப்புச்சத்தியாகிரகப் போராட்டம்.

கடல்நீரை எடுத்துவந்து கடற்கரையில் ஊற்றுவது என்பது தான் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டம். மிக எளிதான போராட்டம். ஆனால் மக்களின் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறும் போராட்ட மன உறுதியை பன்மடங்கு ஏற்றிய போராட்டம்.

முதல் நபர் கடல் நீரை எடுத்து வந்து கடற்கரையில் ஊற்றுவார். ஆங்கிலேயபோலீஸ் சட்டத்தை மீறியதற்காக அந்த நபரை தடியால் அடித்து மண்டையை உடைத்து தண்டிக்கும்.

அடுத்ததாகப் போராட்டம் செய்ய வேண்டிய ஆள் (பொதுஜனம்) முதலில் போராட்டம் செய்து வெள்ளைக்காரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடியால் அடிபட்ட நபருக்கு முதலுதவி செய்து விட்டு, அடுத்து தனக்கு இதே நிலை தான் என்பதை அறிந்த, தெரிந்துகொண்ட நிலையில் கொள்கைப் பிடிப்போடு கடல் நீரை எடுத்துவந்து கடற்கரையில் ஊற்றிய படிக்கு உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் தொடர்ந்து நடந்தது.

இப்படி பாரத தேசமெங்கும் அமைதியாக கொள்கையுடன் உப்புக்காகப் போராடும் பல லட்சம் பேரை வெள்ளைக்கார போலீஸ் அடித்து துன்புறுத்தினாலும் இறுதியாக தோல்வி கண்டது.

பல்வேறு சூழல் நிலையில் இருந்த பொது மக்களை கொள்கையால் ஒருங்கிணைத்துச் செல்லும் திறன் அஹிம்சைப் போராட்டத்திற்கு மட்டுமே உண்டு என்று உலகிற்கு உணர்த்தியவர் காந்தியடிகள்.


மதுரை வந்த காந்தி அப்பகுதி மக்கள் வறுமை நிலை கண்டு வருந்தி அவர்கள் நிலை மேம்படும் வரையில் தனக்கு ஆடம்பர உடை தேவையில்லை என்று சொல்லி தனது எஞ்சிய வாழ்நாள் முழுதும் நாலுமுழ வேட்டியே அணிந்தார்.



அரைவேட்டி உடையுடன் இங்கிலாந்து பிரதமர் வீட்டின் முன் காந்தியடிகள்


Ireland, Kosovo, Serbia, Srilanka, Malaysia, மத்திய கிழக்கு என்று பல தேசங்களில் அதன் தலைவர்கள் மதம் கொண்டு மக்களை (தரம்)பிரிக்கையில், பாரதத்தை மதம் கொண்டு முகம்மது அலி ஜின்னாவும், ஆங்கிலேயரும் பிரித்த பின்னரும், மதத்தின் காரணமாக இந்தியாவை விட்டுச் செல்லவேண்டியதில்லை... தொடர்ந்து வசிக்கலாம் என்று இந்தியாவின் பெரும்பான்மை மதத்தினரை மத உணர்வுரீதியாக பெருந்தன்மையாக, சகிப்புத்தன்மையை முன்னெடுக்கவைத்த உண்மையான மக்கள்தலைவர் காந்தியடிகள்.

காந்தியடிகளின் கொள்கைகளால்தான் இன்றைக்கும் பாரத தேசத்தின் வெகுஜன மக்கள் ரசிக்கும் விளையாட்டான கிரிக்கெட்டில் பிற மதத்து அசாருதீன்கள் தலைமையேற்கவும், இர்பான் பதான், ஜாஹீர், முகம்மது கைப்-கள் தொடர்ச்சியாக விளையாடவும், அகம்மதி போன்றோர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, முகம்மது ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதியாக வலம் வர முடிகிறது.

காந்தியடிகளும் (முகம்மது அலி ஜின்னா போன்று) மத ரீதியாக இசுலாமிய மக்கள் பாகிஸ்தான் போயே ஆகவேண்டும் என்று நிலைப்பாடு எடுத்திருந்தால், இன்று இந்தியர்களாக (ஜஹாங்கீர்) ரத்தன் டாட்டா, அப்துல்கலாம், அஜிம் பிரேம்ஜி போன்றோர் நம்மிடையே இருந்திருக்க முடியாது போயிருக்கும். இவர்கள் தத்தம் திறமையால் வெற்றி அடைய அவர்கள் திறமையை மதம் தவிர்த்த மனதால் ஏற்றுக்கொள்ளும்படியான All inclusive Pluralistic சமூகமாக பாரத சமூகம் தொடர முக்கியமான சமயத்தில் தருமமான முடிவை 1947ல் எடுத்த உன்னதமான தலைவர் காந்தியடிகள்.

பாரதத்தின் சனாதன தருமம் என்பது அனைத்தையும் உள்ளடக்கிக்கொள்ளும் all inclusive தன்மை உடையது. காந்தி பாரதப்பிரிவினையின் போது Hindu Exclusive தேசமாக இந்தியா உருவாவதை எதிர்க்கவைத்தது சனாதன தரும all inclusive பாரதப் பாரம்பரிய சித்தாந்தமே.

பாரதத்தின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆங்கிலேயரால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு, சாக்குச் சணலில் கைதி உடை அணிந்து உடல் முழுதும் அரிப்பெடுத்து சொறிந்து சொறிந்து உடல் புண்ணாகி சீழ்பிடித்து சிதைந்து மடிந்த பல்வேறு முகம் தெரியாத பாரத சுதந்திரபோராட்ட வீரர்களை காந்தியடிகளின் பிறந்தநாளான இன்று நினைத்துக் கொள்கிறேன்.

வெளிஉலக சுதந்திரம் கிடைக்கும் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் டீன் ஏஜ் மாணவனுக்கு முதல் எதிரியாக எள்ளலுக்கு உள்ளாவது அவனது சொந்தத் தந்தைதான்.
இத்தனைக்கும் மகன் கல்லூரிப்படிப்பும் விடுதி வாழ்க்கை என வெளிஉலகில் சுதந்திரமான சூழலில் இருந்து அனுபவம் பெற அடிநாதமாய் இருப்பது தந்தைதான்.

இன்றைய சுதந்திரமான சூழலில், படித்த பாரத தேச இளைஞர்கள் நமது தேசத்தந்தையான காந்தியடிகளை இப்படித்தான் தங்கள் இஷ்டத்துக்குப் பேசுவது என்று ஏகமாக எள்ளி நகையாடுகிறார்கள்.

இருபது ஆண்டுகள் முன்பாக தந்தையின் காசில் விடுதியில் தங்கிப் படித்த கல்லூரி மாணவன் தான் நான். சொந்த அப்பனையே எந்தப் புரிதலும் இல்லாமல், விடுதியிலும் நேரிலுமாக அப்போது நையாண்டிகள் பல செய்தவன் தான் நான்.

காந்திக்கு இருந்த சமூக அக்கறையில் புள்ளி அளவுக்கு இல்லாமலே அவர் செயல்களை ஒப்புக்கொள்ளாது விமர்சித்தவன் தான் நான்.

இன்று என் தந்தை எனது வெளிஉலக, பொருளாதார சுதந்திரம் பெற்றுத் தந்த கல்விக்காகச் செய்த தியாகமும், உழைப்பும், ரத்தத்தை வியர்வையாகச் சிந்திய அருமையை உணர்கிறேன்.

அதே மாதிரியே நமது தேசத்தந்தை காந்தியடிகளின் அருமையை உணர / விமர்சிக்க எவருக்கும் உண்மையில் ஒரு அருகதை வேண்டும் என உணர்கிறேன்.


ஹாப்பி பர்த் டே காந்திஜி!

Let us think of Reflecting some of the Gandhian values in our day to day life.

அன்புடன்,


ஹரிஹரன்