Thursday, June 29, 2006

(5) ஆதலினால் காதல் செய்ய முற்படுவீர்

முதலில் இரு கேள்விகள்:

1. ஒரு இருபத்தி இரண்டு வயது இளைஞனுக்கு வேப்பங்காயினும் கசந்திடக் கூடியது எது?

2. ஓடும் பாம்பை மிதித்திடும் ஆற்றல் உள்ள துடிப்பானவனைத் துடிதுடிக்கச் செய்திடும் வல்லமை உள்ளவைகளில் மிகக் கொடூரமானது எது?

முதல் கேள்விக்கு என் பதில்:

ஒன்றுக்கு மூன்று தாய் மாமாக்கள் இருந்தும் அவர்கள் அனைவருக்கும் தடி தடியாய் 6 அடி உயரத்திற்கு துவார பாலகர்களாய் ஆறு மகன்கள் மட்டுமே இருப்பது.

என் (துர்)அதிர்ஷ்டம் தாய்மாமா வழியிலோ, அத்தை வழியிலோ முறையான முறைப் பெண்களே இல்லாமல் போனது. நான் போடியிலிருந்து 12வது வரை படித்த போதெல்லாம் இந்த விஷயம் எனக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தியதில்லை.

கல்லூரியில் படித்த போது "அதிக அக்கறையான" நண்பர்கள் என் மூன்று தலைமுறை அளவுக்கு விசாரித்தில் எனக்கும் ஒரு உண்மை புரிந்தது, என்னை 1986-ல் தாக்கிய இந்த (துர்)அதிர்ஷ்டம் என் அப்பா, சித்தப்பாவையும் 1950-களில் தாக்கியிருந்திருக்கிறது என்று!

கல்லூரி நண்பர்களும் துக்கித்து, விசனப்பட்டுவிட்டு , பட்டென்று உஷர்ராகி என் இந்த துர்-அதிஷ்டக்காற்று தங்களைத் தாக்கிவிடக்கூடாது என்று என்னைத் தவிர்த்து விட்டு, புராண இலக்கணத்திற்கு முரணாக உடன் படித்த (ஏதோ சுமாரான)ஆண்டாள் பின்னால் லோ..லோ என்று சுற்றுவார்கள். இந்த அழகில் கிளாஸுக்கு கட் அடித்து விட்டு பாலன் K. நாயர் நடித்த மலையளப்படமெல்லாம் போவது ஒழுக்கக்கேடு என்று நான் சொல்லிவைக்க என்னை ஏதோ விநோத ஜந்து மாதிரி பார்த்துக் கெக்கலிக்க என்றானது.

சரி. விஷயத்திற்கு வருவோம். இப்படியாக கல்லூரியில் தப்பிப் பிழைத்த என் முறைப்பெண்ணே இல்லாத நிலை, சென்னைக்கு வேலைக்கு வந்த போது மீண்டும் பொதுக்குழுவில் விசாரிக்கப்படும் நிலை வந்தபோது சென்னை நண்பர்கள் ... பட்டணத்து நண்பர்கள் அல்லவா, கல்லூரி ந்ண்பர்கள் மாதிரி மூன்று தலைமுறை ஆராய்ச்சியெல்லாம் இல்லை! இவர்கள் இம்முறை extended family tree-ஐ தங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ள, எனது அப்போதுதான் அகமதாபாத்திலிருந்து திருச்சி வந்திருந்த என் அம்மாவழி ஒன்று விட்ட மாமாவுக்கு கல்லூரியில் படிக்கும் (தூரத்து முறைப்)பெண் இருப்பதை என் நேரம் சரியில்லாததை உணராமல் சொல்லி வைத்தேன்.

என்னை "க்யாம்த் ஸே -அமீர்கான், அ-ஔ கான் என்று உசுப்பேற்றிவிட... அடுத்தமுறை வேலை சம்பந்தமாக திருச்சி "பாரத மிகு மின் நிறுவனம்" செல்லும் போது காதலைச் சொல்லிவிட வேண்டும்... இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டேன்.

அம்மாவிடம் எல்லா உண்மையையும் சொல்லாமல் ஏதும் செய்ததில்லை. சொந்த ஊர் போடிக்குச் சென்று அம்மாவுடன் சுப்ரமண்யஸ்வாமி கோவில் ப்ரகாரத்தில் சுற்றிவரும் போது, காயத்ரியைப் பிடித்திருக்கிறது என்றேன்.

அம்மா "கிழக்குவாசல்" படத்தில் மனோரமா சொல்வது மாதிரி... அவங்களெல்லாம் பணக்காரர்கள்...கேட்டா என்ன சொல்வார்களோ? எனச் சொல்ல.. சுரீர் எனப்பட்டது...

இந்த இல்லை என்றால் என்ன ஆவது என்பதற்கு மனதைத் தயார் செய்யவேண்டும். ஆனால் நேரந்தானில்லை.

1992-ல் ஒரு முறை BHEL-Trichy plant-ல் வேலையை முடித்துவிட்டு மாமா வீட்டிற்கு நான் உளறிக் கொட்டிப் பதிந்திருந்த ஆடியோ காஸட், லவ் கார்ட்ஸ் சகிதம் சென்றேன். ஏதோ தருணத்தில் கொடுத்துவிட்டு வெளியே சென்று விட்டேன். திரும்பி வந்தபோது "இது சரிப்படாது" என்றாள்.

சென்னை திரும்பிய பின் தினம் ஒரு லவ் கார்டு போஸ்டில் அனுப்பினேன். என் ஆங்கிலம் மேம்படுத்தப்பட்டது. சில மாதம் கழித்து திருச்சி சென்ற போது "அண்ணா" என்றாள். நீ அத்தனை சிறப்பாய் இல்லாததாலேயே "அண்ணா" என்று மட்டுமே அழைக்கத் தகுதி எனக்கிருப்பதாகக் கூறினாள். வருத்தமடைந்தேன். அழவில்லை.

இம்முறை எனது ஈகோ ஆழமாய் காயப்பட்டிருந்தது. மருந்து என் எழுச்சியில் மட்டுமே உள்ளது என்பது தெளிவாய்த் தெரிந்தது. இரண்டாண்டுகளில் குவைத் வரும் வாய்ப்பு 1994-ல் கிடைக்கும்படி மேற் கொண்டிருந்த முயற்சிகள் பலனளித்தன.

இரண்டாவது கேள்வியான: ஓடும் பாம்பை மிதித்திடும் ஆற்றல் உள்ள துடிப்பானவனைத் துடிதுடிக்கச் செய்திடும் வல்லமை உள்ளவைகளில் மிகக் கொடூரமானது எது?

(தூரத்து) முறை மாமா பெண் "அண்ணா" என அழைப்பது!.

தொடர் புகைப்பாளனானாலும், பொருளாதார உயர்வு குறித்தே யோசித்தேன். Emotional Energy-ஐ வீணாக dissipate -ஆகாமல் conserve செய்து எனது உருப்ப்டியான வளர்ச்சிக்கும்
பயன் படுத்திக் கொண்டேன்.

முறைப்பெண்கள் tease செய்து ரிஜக்ட் செய்யும் போது நம்முள் உறைந்து இருக்கும் பெரும் ஆற்றலை அறியும் சந்தர்ப்பம் இருக்கிறது... ஆதலினால் காதல் செய்ய முற்படுவீர்... வாழ்வில் பெருவெற்றி அடையலாம்.

அன்புடன்,

ஹரிஹரன்

4 comments:

நாகை சிவா said...

நல்ல அழமான கருத்து சொல்லி இருக்கீங்க.....
பெரு வெற்றி அடைவதற்க்கு நல்ல வழிக்காட்டி உள்ளீர்க்கள். முயற்சித்து பார்க்கின்றேன் :))))
நல்லா இருக்குங்க..

Hariharan # 03985177737685368452 said...

//நல்ல அழமான கருத்து சொல்லி இருக்கீங்க.....
பெரு வெற்றி அடைவதற்க்கு நல்ல வழிக்காட்டி உள்ளீர்க்கள். முயற்சித்து பார்க்கின்றேன் :))))
நல்லா இருக்குங்க..//


வாங்க சிவா. Safe area-ல் முயற்சிக்கவும். வீழ்ச்சியினின்று சுயமாய் முயன்று மேலேறி ஜெயிக்கிற சுகம் வாழ்க்கையில் அலாதியானது.

Geetha Sambasivam said...

ஹரிஹரன்,
அது சரி, இப்போ கல்யாணம் ஆயிடுச்சா சொல்லவே இல்லையே?

@சிவா, காதல் பாடமா படிக்கிறீங்க? வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

Hariharan # 03985177737685368452 said...

கீதா,

சோதித்த பின் இறைவன் தருவது ப்ரஸாதம். 2001ல் திருமணமாகி இரு சின்ன தேவதைகள் இருக்கிறார்கள்.